
வளாகத்துக்குள் நுழைந்த பொலிஸ் அதிரடிப்படையினர் மாணவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், மாணவர்கள் மது போதையில் வாகனம் ஓட்டியதனாலேயே அத்துமீறி உள் நுழைந்ததாகப் பொலிஸார் சொல்வதில் உண்மையில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை மோட்டார் சைக்கிளில் பயணித்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், போக்குவரத்துப் பொலிஸாரும் கலைத்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் யாழ். பல்கலைக்கழகத்தினுள் அனுமதி பெறாமல் அத்துமீறி உள்நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தியமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதே மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் ஊடகங்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் தெரிவிக்கையில், “பல்கலைக்கழக வளாகத்தினுள் ஆயுதம் தாங்கிய படையினர் எக்காரணம் கொண்டும் அனுமதி பெறாமல் உள்ளே வருவதில்லை.
இன்று மாணவர்கள் இருவரை வீதியிலிருந்து கலைத்துக் கொண்டு வந்து வளாகத்தினுள் வந்தது மட்டுமல்லாமல், துப்பாக்கியைக் காட்டி மாணவர்களை அச்சுறுத்தியுமுள்ளனர்.
அத்துமீறி உள் நுழைந்ததை திசை திருப்பும் வகையிலேயே மாணவர்கள் மது போதையில் இருந்ததாக பொலிஸார் கூறுகின்றனர். இதில் உண்மையில்லை” என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
