யாழ்.வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் செல்லவுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் கூறியுள்ளார்.
விகாரை அமைப்பு தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வலி.வடக்கு கிராமங்களில் மிக நீண்டகாலத்திற்கு முன்னர் வெதுப்பகங்கள், சீமெந்து தொழிற்சாலைகளில் பணியாற்றிய பௌத்தா்கள் வழிபாடுகளை நடத்துவதற்காக சுமாா் 20 பரப்பு காணியில் 1946ஆம் ஆண்டு காலப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டிருந்தது.
அவ்வாறு பௌத்த விகாரைக்குச் சொந்தமான காணியில் விகாரை கட்டப்படுவதில் எமக்கு ஆட்சேபனைகள் எதுவும் இல்லை.
ஆனால் பௌத்தர்களே வாழாத பகுதியில் மக்களுக்கு சொந்தமான காணியை அபகரித்து மகாபோதி அமைப்பது பொருத்தமற்ற விடயமாகும்.
இந்நிலையில் தனியார் காணியில் மகாபோதி அமைப்பதற்கு பௌத்த தேரர் ஒருவர் வலி.வடக்கு பிரதேசசபையிடம் அனுமதி கோரியுள்ளார். ஆனாலும் நாம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.
இதனிடையே, தனியார் காணியில் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குத் தீர்மானித்துள்ளோம்” என்றார்.