ஜப்பானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கென்ஜி ஹரதாவுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.
இரண்டு நாடுகளினதும் சமுத்திர பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டிருப்பதால், சர்வதேச சமுத்திர பாதுகாப்பைப் போன்று சர்வதேச கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஜப்பானும் இலங்கையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு, கடற்படைத்துறையில் தற்போதிருந்து வரும் நெருங்கிய ஒத்துழைப்பை, இராணுவத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இரண்டு நாடுகளுக்கிடையேயும் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை அந்த ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்றும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையின் அபிவிருத்திக்காக இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு உடன்படிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கு இது முக்கியமானதொரு நடவடிக்கையாகும் என்றும் குறிப்பிட்டார்.
அதேநேரம், இதன்போது கருத்துத் தெரிவித்த ஜப்பானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கென்ஜி ஹரதா, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு கடந்த சில வருடங்களாக துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்து சமுத்திரத்தில் இலங்கையின் முக்கியத்துவம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், சமுத்திரம் இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற வகையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சமுத்திர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.