
72 வருடங்கள் வரலாற்றில் 19ஆவது ஜனாதிபதி விருது விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இந்த விருதுவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) தாமரைத் தடாக கலையரங்கில் கோலாகலமாக இடம்பெற்றது.
2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை திரையிடப்பட்ட 79 திரைப்படங்களில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய 27 கலைஞர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன், முன்னோடி விருதுகள், சுவர்ணசிங்ஹ விருது மற்றும் விஸ்வ கீர்த்தி விருதுகள் 11 பேருக்கு ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது வாழ்நாள் விருதாக வழங்கப்படும் ´சுவர்ணசிங்ஹ´ விருது ஜனாதிபதியினால் பிரபல திரைப்பட நடிகர் ரவீந்திர ரந்தெனிய, முன்னணி திரைப்பட நடிகை நீதா பெர்னாண்டோ, பிரபல திரைப்பட இயக்குநர் சுகதபால செனரத் யாப்பா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இதேநேரம், அனோமா ஜனாதரி மற்றும் திரைப்பட இயக்குநர் சஞ்சீவ புஸ்பகுமார ஆகியோருக்கு ஜனாதிபதியினால் ´விஸ்வ கீர்த்தி´ விருது வழங்கப்பட்டதுடன், சாந்தி அபேசேகர, என்டர் கிரகரி, கே.டி. தயானந்த, சுவர்ணா கஹவிட்ட, சுனில்சோம பீரிஸ், எலெக்சான்டர் பெர்னாண்டோ ஆகியோருக்கு முன்னோடி விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் அனுஷா கோகுல பெர்னாண்டோ, கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேர்னார்ட் வசந்த உள்ளிட்டோருடன் பெருமளவான கலைஞர்கள் கலந்துகொண்டனர்.
