தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “சைவ மக்கள் திருக்கேதீஸ்வரத்தில் சிவராத்திரிக்கு முதன் நாளே இலட்சக்கணக்கில் குவிந்து விடுவர்.
சிவராத்திரியில் சிவனை இதயத்தில் வைத்துக் கண்விழித்து வழிபாடாற்றி அடுத்த நாள் விடிந்ததும் பாலாவி ஆற்றில் நீராடியபின் சிவனை வழிபட்டு வீடு திரும்பும் சைவ மக்கள் ஆன்மீக பேறுபெறும் திருத்தலம் திருக்கேதீஸ்வரம்.
இந்தப் புனித பூமியில் நிகழ்ந்த இக்கொடுஞ்செயலால் ஏற்பட்ட பதற்ற நிலையை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். வேதனையடைகின்றோம்.
இச்செயல் இந்து – கிறிஸ்தவ மக்களிடம் வன்முறையையும் பிளவையும் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்திவிடும் கொடிய செயலாகும். இச்செயற்பாடுகள் தொடர அனுமதிக்கக் முடியாது.
இச்செய்தி கிடைத்ததும் திருக்கேதீஸ்வர நிர்வாகிகளுடனும் இந்துக் குருக்கள்மாருடனும் கலந்து பேசினோம். மன்னார் ஆயர் கொழும்பில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல் கிடைத்தது. அதனால் அவருடன் பேச முடியவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சம்பவம் இடம்பெற்ற மாந்தை சந்திக்கும் திருக்கேதீஸ்வரப் பிரதேசத்திற்கும் சென்று சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசியுள்ளார். அமைதியைப் பேண முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் அதுவும் இந்து – கிறிஸ்தவ மத நம்பிக்கை கொண்டு வாழும் மக்களிடையே பிளவை ஏற்படுத்த இடமளித்துவிடாமல் அனைவரும் நீதியான சமாதான நடவடிக்கைகளை எடுக்க ஒத்துழைக்க வேண்டும்.
பௌத்த ஆதிக்கத்திற்கும் தமிழ் இன அடக்குமுறைக்கும் ஆளாகியிருக்கும் தமிழ் மக்களின் விடிவுக்கும் விடுதலைக்கும் எம்மிடையே நல்லிணக்கம் மிக அவசியமாகும். இன்றைய தேவை இதுவென்பதை நாம் வற்புறுத்தி நிற்கின்றோம்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
