(பாண்டி)
நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் சமூகம் என்கின்ற அடையாளம் தனியாக இருந்து கொண்டாலும் நாங்கள் ஒருமித்து பயணம் செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம் என விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
ஓட்டமாவடி தியாவட்டவான் மீனவர் சங்க கட்டடத் திறப்பு விழாவில் இன்று பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சமூகமாக தனித்து நின்று வாழ முடியாது. இந்த நாட்டிலே இருக்கின்ற சிங்கள சமுகம், தமிழ் சமூகம், முல்ஸிம் சமூகமாக இருந்தாலும் சரிதான் சமூகம் என்கின்ற அடையாளம் தனியாக இருந்து கொண்டாலும் நாங்கள் ஒருமித்து பயணம் செய்ய வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.
நாங்கள் தனித்து நின்று எதையும் சாதித்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பிரச்சனைகள் வந்தது. நாம் அதற்கு முகம் கொடுத்தோம். இனிவருகின்ற பிரச்சனை தேசியம் என்று பேசுகின்ற பிரச்சனையும், தேசியத்திற்கு ஒவ்வொருவரும் என்ன பங்களிப்பு செய்திருக்கின்றார்கள் என்ற பிரச்சனையை பற்றியும் எங்களது பிள்ளைகள் எதிர்காலத்தில் கேட்பார்கள் என்று யோசித்துக் கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லா பிரதேசங்களுக்கும் சென்று சேவை செய்கின்றோம் இந் நாட்டில் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்பதற்காக. அதுபோன்று எமது பிரதேசத்தில் கடந்த காலங்களில் போதுமான நிதியை வழங்கி கல்வியை முன்னேற்ற, மதஸ்தலங்களை முன்னேற்ற வாழ்வாதாரங்களை முன்னேற்ற, வீதி, வடிகாண்களை அமைக்க வேண்டும் என்று பல வேலைத் திட்டங்களை செய்து தந்துள்ளேன்.
நான் ஓய்வுபெறும் காலத்தில் என்னுடைய பணியை செய்ய தவறிவிட்டேன். இவ்வாறு செய்திருக்கலாம் என்று யோசிப்பதற்கு நான் ஒரு இடத்தையும் வைக்கவில்லை. ஏனெனில் எல்லா வேலைத் திட்டங்களையும் செய்து வைத்திருக்கின்றேன் என்றார்.
தியாவட்டவான் ஆழ்கடல் மீனவர் சங்க தலைவர் எம்.எஸ்.ஹைதர் அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர் எஸ்.குரூஸ், மீன்பிடி கூட்டுறவு பரிசோதர் எம்.இம்தியாஸ் உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரின் இருபது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட மீனவர் சங்க கட்டடம் திறந்து வைக்கப்பட்டதுடன், ஆற்று அணைக்கட்டின் இரண்டாம் கட்டமான பதினைந்து இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டின் வேலைத் திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்அணைக்கட்டிற்கு முப்பது இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது வாழைச்சேனை அல்சபா மீனவர் சங்கத்தினரால் விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர் எஸ்.குரூஸ், மீன்பிடி கூட்டுறவு பரிசோதர் எம்.இம்தியாஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.