எனது வீட்டு
திண்ணைக் குந்தில் நான் இருந்தேன்
உடைந்த மழையில்
இசைக்கத் தொடங்கியது புல் வெளி
இரண்டு றெக்கைகள் கொடுத்து
காற்றை அழைத்தேன்
காற்று வாசனையோடு வந்து
என்னை ஏற்றிப் பறந்தது.
அது பறவைகளின் வெளி
அங்கு நிசப்தத்தை குலைக்கும்
கீச் கீச் சப்தங்கள்
நான் நிசப்தத்தில் வாழப் பழகிக் கொண்டவன்
எந்தச் சலனமும் எனக்கு பிடிப்பதில்லை
இன்னும் நான்
தனிமை வாசி என்பதால்
பறவையொன்றின் றெக்கைகளை
வாங்கிக் கொண்டு
நான் எனது திண்ணைக் குந்திற்கு வந்து விட்டேன்
வீடு முழுக்க
புழுக்கம் புழுக்கமா இருக்கிறது
காற்றை மறந்து அங்கு
வைத்து விட்டு வந்தது
பெரும் தவறு என்பதை
மூன்றாம் இருளிடம் சொல்லி
புலம்ப வேண்டியிருக்கிறது இப்போதெல்லாம்.
ஏ.நஸ்புள்ளாஹ்.