பெரம்பலூரில் பேருந்தில் குழந்தை கடத்தப்பட்டதாக நாடகமாடிய இளம்பெண் போலீஸ் விசாரணையில் குழந்தையைக் கொன்றது அம்பலமானது.
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரத்தை அடுத்து தேவையூர் என்கிற கிராமத்தை வசிப்பவர் பிச்சை. வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள். இவர்களுக்கு 4 மாதத்தில் பெண் குழந்தை குழந்தை உள்ளது.
கணவர் வெளிநாட்டில் வசிப்பதால் கோவிந்தம்மாள் குழந்தையுடன் மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். கோவிந்தம்மாள் நேற்று வாலிகண்டாபுரத்தில் இருந்து பெரம்பலூருக்கு தனது கைக்குழந்த்கையுடன் சென்றார். அரசு பேருந்தில் பயணித்தபோது அவரது 4 மாத கைக்குழந்தை காணாமல் போனதாக வாலிகண்டபுரம் போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார் விசாரணை நடத்திய நிலையில் குழந்தை காணாமல் போயும் அதைப்பற்றி அக்கறை இல்லாமல் விசாரணை நடத்துகிறீர்களே என கோவிந்தம்மாள் குதித்தார். எங்களுக்கு சரியாக தகவல் சொல்லுங்கள் குழந்தை எப்படி காணாமல் போகும், வேறு யாராவது அருகில் இருந்தார்களா? குழந்தையை அவர்களிடம் கொடுத்தீர்களா? என்றெல்லாம் போலீஸார் துருவி துருவி கோவிந்தம்மாளிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கோவிந்தம்மாள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் கடுமையாக விசாரணை நடத்தியபோது கோவிந்தம்மாள் உண்மையை ஒப்புக்கொண்டார். குழந்தை காணாமல் போகவில்லை, அதை தான் கிணற்றில் வீசி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
பேருந்தில் ஏறும் முன் வாலிகண்டாபுரம் அருகே ஒதுக்குபுறமாக உள்ள விவசாயக் கிணற்றில் குழந்தையை வீசியதாக கோவிந்தம்மாள் கூறியதை அடுத்து அங்குச் சென்ற போலீசார், குழந்தையின் சடலத்தை கைப்பற்றினர். குழந்தையை கொடூரமாக கொலை செய்த தாய் கோவிந்தம்மாளை கைது செய்த போலீசார், பெற்ற குழந்தையை கொலை செய்தது ஏன் என விசாரித்து வருகின்றனர்.
கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் வேறு தவறான தொடர்பு ஏற்பட்டு அதற்கு குழந்தை தொந்தரவாக இருப்பதாக கருதி கொலை செய்தாரா? அல்லது குடும்பத்தில் உள்ள பிரச்சினையில் குழந்தையை கொலை செய்தாரா? என பல்வேறு கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.