2015ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகள் பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப் பின்தங்கிய மற்றும் எல்லைப்புறக் கிராமமான ஓமடியாமடு பிரதேச மாணவனுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் பிறந்த தினமான நேற்று வெள்ளிக்கிழமை துவிச்சக்கர வண்டியொன்று பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி சுதர்சினி சிறிகாந்த், திருமதி. நவரூபரஞ்சினி சிறிகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, தேசிய உரச் செயலக உதவிப்பணிப்பாளர் ஏ.எல்.சிராஜுன், பிரதம உள்ளகக் கணக்காளர் திருமதி. இந்திரா மோகன், மாவட்ட பொறியியலாளர் எஸ்.சுமன் மற்றும் அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்டத்தின் பொலனறுவை மாவட்ட எல்லையில் உள்ள மிகப்பின்தங்கிய பிரதேசமான ஓமடியாமடுவைச் சேர்ந்த ஒரு மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் 150 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டமையானது அரசாங்க அதிபரால் பாராட்டப்பட்டதுடன் தொடர்ச்சியான கற்றலின் மூலம் சிறந்ததொரு கல்வியாளனாக எதிர்காலத்தில் திகழவேண்டும் என்றும் வாழ்த்தினார்.
தேசிய உரச் செயலகத்தின் ஏற்பாட்டில் இத் துவிச்சக்கர வண்டிய வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.