ஹிட்லரின் வாரிசுபோல் இனி யாரும் செயற்பட முடியாது என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். சனிக்கிழமை காலை அலரிமாளிகையில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு மூலம் ஜனநாயகத்தின் காவலாளியாக இலங்கை உள்ளது எனும் செய்தி உலகுக்கு சொல்லப்பட்டுள்ளது. அதிகாரம் ஒருவரிடம் குவிந்து கிடக்கிறது என்பதற்காக இனி யாரும் ஹிட்லரின் வாரிசுகள் போல் செயற்படமுடியாது என்ற செய்தி இப்போது அதிகாரத்தில் உள்ளவர்களிடமும் இனிமேல் அதிகாரத்துக்கு வரவுள்ளவர்களிடமும் சொல்லப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முரட்டு பிடிவாத்ததுக்கான சிறந்த வைத்தியத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஐக்கிய தேசிய முன்னணி அரசு என்ன செய்தது என கேட்டவர்களுக்கு இந்த நீதிமன்ற தீர்ப்புக்களே சிறந்த பதில். நாம் உருவாக்கிய சுயாதீன நீதிமன்றம் மூலமே இன்று ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. தமக்கு சாதகமாக தீர்ப்பு வழங்காத நீதிபதியை பதவி நீக்கம் செய்த காலமும் இருந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நாம் வழங்கிய ஊடக சுதந்திரம், தொழில் சங்கங்களுக்கான சுதந்திரம் மூலம் எம்மை விமர்சித்த பலர் கடந்த 50 நாட்களாக காணமல் போயிருந்தனர். நாளை எமது தலைவர் பிரதமராக பதவியேற்றபின் காணாமல் போன தொழில்சங்களை நீங்கள் மீண்டும் காண முடியும். அரச வைத்திய சங்கம் மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நிகழ்ச்சிநிரலை இன்றிலிருந்தே செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
ஆகவே கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு மஹிந்த ராஜபக்சவின் அரசியல் நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கும் தொழில்சங்கங்களுக்கு உரிய பதிலை வழங்க நாம் தயாராகவே உள்ளோம். இவர்களின் அரசியல் நோக்கங்களுக்காக பொதுமக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
ஜனாதிபதியை பற்றி கருத்து கூறுவத்துக்கு ஒன்றும் இல்லை. கடந்த 50 நாட்களில் ஜனாதிபதி யார் என்பதை மக்கள் நன்கு உணர்ந்திருப்பர். மிஸ்டர் பீனின் நகைச்சுவைகளை பார்த்து சிரிக்க மட்டுமே முடியும். அதுபற்றி ஆராய்ந்து நேரத்தை வீணாக்குவதில் எந்த பயனுமில்லைஎன தெரிவித்தார்.
அ . அச்சுதன்