பயனர்கள் பற்றிய தகவல்களை அமேசான், ஏப்பிள், மைக்ரோசொப்ட், நெட்பிளிக்ஸ், ஸ்போட்டிபை மற்றும் யோன்டெக்ஸ் உள்ளிட்ட மற்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் அணுகுவதற்கு பேஸ்புக் சமூக வலைதளம் எப்படி அனுமதித்தது என்ற வழிமுறைகள் பற்றிய புதிய விவரங்களை இந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
சில தேர்வுகளில், தங்களுக்கு சிறப்பு அணுகுதல் வசதி உள்ளது பற்றி கூட தெரியாது என்று சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தன்னுடைய செயற்பாட்டை பேஸ்புக் நிறுவனம் நியாயப்படுத்தியுள்ளது.
வலைத்தளத்தை பயன்படுத்தும் மக்களின் அனுமதி இல்லாமல் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதற்கு ஒருபோதும் அனுமதித்தது இல்லை என்றும், அந்தத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப் பட்டதற்கான ஆதாரம் எதையும் காண முடியவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருந்தபோதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சிறப்புரிமை அளிப்பதை கைவிடுவதாக வெளிப்படையாக அறிவித்த பிறகு, பயனாளர்களின் தகவல்களை மூன்றாம் தரப்பினர் பெறுவதற்கான வழிமுறைகளை தாங்கள் தடுத்திருக்க வேண்டும் என்று பேஸ்புக் ஒப்புக்கொண்டுள்ளது.
பயனர்களுக்கு கிடைக்கும் தனிப்பட்ட தகவல்களைப் படிப்பது, பெயர்கள், தொடர்பு விவரங்கள், அவர்களுடைய நண்பர்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட தகவல்களைப் பார்ப்பது என்ற அளவுக்கு மற்ற நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்பதற்கான உதாரணங்களை நியூயார்க் ரைம்ஸ் வெளியிட்டுள்ளது.
இந்தப் பிரச்சினையை பேஸ்புக் நிறுவனம் கையாண்ட விதம் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அந்த நிறுவனத்தின் முன்னாள் முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி அலெக்ஸ் ஸ்டாமோஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், யாருக்கெல்லாம் எந்த வகையிலான சிறப்பு அணுகுதல் வசதிகள் அளிக்கப்பட்டன என்பது குறித்து கூடுதல் விவரங்களை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா தகவல்களை சூறையாடியது, மியான்மரில் வன்முறையை தூண்டியது, அமெரிக்க தேர்தலில் ரஷ்யா மற்றும் ஈரான் தலையீடுகளுக்கான ஆதாரம் மற்றும் தகவல்களை வெளிப்படுத்தும் பல வழிகள் உள்பட தொடர்ச்சியான முறைகேடுகளை சமீபத்திய தகவல்கள் உறுதி செய்கின்றன.
இவையெல்லாம் பேஸ்புக் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டன. புதிய கட்டுப்பாடுகள் வேண்டும் என்ற தேவை எழுந்துள்ளது. இதுகுறித்து தலைமை நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தியுள்ளது