skip to main
|
skip to sidebar
ஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை – அமெரிக்க நீதிமன்றம்
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொண்டுவந்த ஒபாமாகேயார் மருத்துவ காப்பீட்டு திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது என டெக்சாஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் வாழும் நடுத்தர வர்க்கத்தினர் பயனடையும் வகையில் நோயாளி காப்பு மற்றும் கவனிப்பு சட்டம் (Patient Protection and Affordable Care Act, PPACA) என்ற திட்டத்தை முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடந்த 2010-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
இந்த திட்டம் பரவலாக ‘ஒபாமாகேயார்’ திட்டம் என அந்நாட்டவர்களால் அழைக்கப்படுகிறது. சுமார் 5 கோடி மக்கள் பலனடையும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு முன்னர் எதிர்ப்பு தெரிவித்தும் இதுதொடர்பாக ஒபாமா அரசு இயற்றிய சட்டம் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் சிலர் வழக்குத் தொடர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த சட்டம் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் கடந்த 2012 ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.
ஒபாமாவுக்கு பின்னர் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப், பதவி ஏற்ற பின்னர் முதல் வேலையாக இந்த ஒபாமாகேயார் திட்டத்தை ஒழிப்பதற்கான உத்தரவில் கையொப்பமிட்டார்.
இந்நிலையில், இதுதொடர்பாக டெக்சாஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் தற்போது தீர்ப்பளித்துள்ள நீதிபதி, ஒபாமாகேயார் திட்டம் அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானது, செல்லத்தக்கதல்ல என தீர்ப்பளித்துள்ளார்.