இன்றைய முதலாவது இறைவாக்கு வாசகத்திலே பவுல் அடியார் நமக்கும் தூய ஆவியானவருக்கும் உள்ள தொடர்பை, உறவை எடுத்துச் சொல்லுகின்றார். இறைவனை, அவருடைய கொடைகளை, நம்மைப் பற்றிய அவரது சிந்தனையை தூய ஆவியானவரின் அருளின்றி நம்மில் யாராலும் புரிந்து கொள்ள முடியாது என்கின்ற அவர், நம்மை அருள் வளங்களால் நிரப்புகின்றவர் தூய ஆவியானவரே என்கின்றார். இறைவன் நமக்காக குறித்து வைத்திருக்கும் வாழ்வை தூய ஆவியானவரின் துணையின்றி நம்மால் விளங்கிக் கொள்ளுதல் என்பது கடினம்.
தூய ஆவியானவரின் வழி காட்டுதலும், அருட் கொடைகளும் இல்லையென்றால் நம் வாழ்வில் மீட்பும் இல்லை, முன்னேற்றமுமில்லை என்றாகின்றது. இறைமகன் கிறீஸ்து எம்மை எமது பாவ வாழ்வில் இருந்து மீட்கும்படியாக தமது உயிரையே பணயம் வைத்தார். இருந்தும் அந்த மீட்பை நம்மில் பூரணமாக அடைந்து கொள்ள நமது ஆன்மீகத்தில் மட்டுமல்ல, நமது சுயத்திலிருந்தும் நமக்கு மீட்பு தேவை. நமது சுயத்திலிருந்து நம்மை மீட்க யாரும் வரப்போவதில்லை. நாம் தான் நம்மை மீட்டுக் கொள்ள முடியும் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து வைத்திருத்தல் அவசியம். பின்னர் இறைவனின் அருள் கொண்டு அதைச் சாதனையாக்கிக் கொள்வது எங்கள் கைகளில்தான் தங்கியிருக்கின்றது. குதிரையை நீருற்றுக்கு வழி காண்பித்து அழைத்துச் செல்வதொன்றும் பெரிதில்லை. நீரைப் பருக வேண்டியது குதிரையேயன்றி அதை அழைத்துச் செல்பவன் அல்லவே.
நமக்குள்ளே உறைந்திருக்கின்ற தீயவற்றிலிருந்து, நமக்குள்ளே குடிகொண்டிருக்கின்ற நம்பிக்கையீனத்திலிருந்து, நம் வாழ்வு மற்றும் நம் மீது நாம் வளர்த்துக் கொண்டிருக்கக் கூடிய அதிருப்தியிலிருந்து, நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளும்போதுதான் நமக்கான மீட்பு நம்மை வந்தடையும். அதற்கு நம்மையே நாம் அன்பு செய்ய வேண்டும். அப்போதுதான் அயலானை நாம் அன்பு செய்யவும். ஆதரிக்கவும் முடியும். மற்றையது, தக்க முடிவுகளைத் தக்க சமயத்தில் எடுக்கவும் வேண்டும். இதற்குத்தான் ஆவியானவரின் அருள் நமக்கு நிரம்பத் தேவை. நாம் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் நம்மைச் சரியான பாதையில் அடியெடுத்து வைப்பதை உறுதிப்படுத்தும்.
நம்மைச் சரியான வழியில் கொண்டு செல்லத் தக்க முடிவுகளை நாம் தூய ஆவியின் அருள் கொண்டு எடுக்க வேண்டுமானால் அதற்கு அடுத்தவர் உதவிகளும் நமக்குத் தேவை! நாம் சிறப்பாக இருக்கவும், சிறந்ததையே நினைக்கவும், செய்யவும் ஏற்ற வகையில் நம்மை முன்னோக்கித் தள்ள, நம்மை ஊக்குவிக்கக் கூடிய நல்லிதயம் கொண்டவர்களை நம்மைச் சுற்றிலும் கேடயமாக நாம் கொண்டிருத்தல் தேவை. நாடகங்களும், வேடங்களும், எதிர் மறையான சிந்தனைகளும் நமக்கு என்றுமே உதவப் போவதில்லை என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நமது வாழ்வில் நமக்கு அவசியமானது உயர்ந்த இலட்சிங்களும், உயர்வான உந்துதலும்தான். அது மாத்திரமல்லாது, நம்மில் நேர் மறையான சக்தியும், நல்ல நேரமும் தேவை. எரிச்சலும், பொறாமையும் நமக்கு ஆகாது. நம் ஒவ்வொருவரிலும் எது சிறந்ததோ அதையே, அதை மட்டுமே நாம் முன்னுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கான ஆற்றல்கள், வளங்கள், வல்லமை அனைத்தையும் வழங்குபவர் தூய ஆவியானவரே.
ஆனந்தா ஏஜீ. இராஜேந்திரம்
(தொடரும்)