இந்த புயல் காரணமாக வன்கூவர் ஐலன்ட்டின் டங்கன் பகுதியில் வீடு ஒன்றின் மீது மரம் சரிந்து வீழ்ந்துள்ளதால் ஒரு பெண் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காற்றின் வேகம் காரணமாக பல்வேறு இடங்களிலும் மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளதால் 3,30,000 ற்கும் அதிகமானோருக்கான மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், வன்கூவர் ஐலன்டில் நீர் வினியோகமும் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை ஐந்து மணி அளவிலான நிலபரப்படி, லோயர் மெயின்லேண்ட், ஃப்ரேசர் பள்ளத்தாக்கு, சன்ஷைன் கோஸ்ட், வான்கூவர் தீவு மற்றும் கோல்ப் தீவு ஆகிய இடங்களில் ஏறக்குறை 1,15,000 வாடிக்கையாளர்கள் மின் வினியோகம் துண்டிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக பிரிட்டிஷ் கொலம்பிய ஹைட்ரோ தகவல் வெளியிட்டிருந்தது.
இந்த ஆண்டில் இதுவரை சந்தித்ததில் மிக மோசமான புயல் இது எனவும், திருத்த பணிகளும் இடம்பெற்று வருகின்ற நிலையில் மின் வினியோகம் வழமைக்கு திரும்புவதற்கு சில நாட்களாகலாம் என்றும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மெட்ரோ வன்கூவர், வன்கூவர் ஐலன்ட் மற்றும் ஃப்ரேசர் பள்ளத்தாக்கு பகுதியில், காற்றின் வேகம் சராசரியாக மணிக்கு 128 கிலோமீட்டராக இருந்ததாகவும், சில இடங்களில், அதிக பட்சமாக மணிக்கு 144 கிலோமீடடர் வேகத்திலும் காற்று வீசியதாகவும் கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் தெரிவித்துள்ளது.