கொங்கோவின் தற்போதைய ஜனாதிபதியான ஜோசப் கபிலா பதவி விலகுவதையடுத்து, சர்ச்சைகள் எதுவுமின்றி அந்த நாட்டில் தேர்தலை நடத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை கொங்கோ தலைநகர் கின்சாசாவிலுள்ள தேர்தல் ஆணையகத்தின் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் வாக்குப்பதிவுக்காக வைக்கப்பட்டிருந்த மூன்றில் இரண்டு மடங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதமாகியுள்ளன. இந்த தீ விபத்திற்காக காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வௌியிடப்படவில்லை.
ஏறக்குறைய 17 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறவிருக்கும் தேர்தலின் பிரசாரத்தின் போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதே முக்கிய வாதமாக இருந்துவந்தது.
நாட்டின் ஜனாதிபதியாவதற்கான போட்டியில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்களான பெலிஸ், மார்ட்டின் பாயுலு ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து அச்சத்தை வெளிப்படுத்தியதுடன், தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிக்கப் போவதாகவும் கூறி வருகின்றனர்.
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவரான நிக்கி ஹாலே, அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது, கொங்கோவின் தற்போதைய சூழ்நிலையை கண்டித்ததுடன், பரிசோதிக்கப்பட்ட, நம்பகமான, வெளிப்படையான, எளிதாக வாக்களிக்கக்கூடிய பழமையான வாக்குச்சீட்டு முறையே சிறந்தது என்றும் தெரிவித்திருந்தார்.
முன்னைய தேர்தல்களின் போது கடுமையான முறைகேடுகள் இடம்பெற்ற கொங்கோவில் இந்த தேர்தலாவது எவ்வித பிரச்சினையுமின்றி நடைபெறுமா என்று வாக்காளர்கள் சந்தேகத்தில் உள்ளனர்.
பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளை அதிகளவு கொண்ட கொங்கோவில், 6 மில்லியன் தகுதி வாய்ந்த வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 500 தேசிய மற்றும் 715 மாகாண ரீதியான ஆசனங்களுக்கு 34,900 வேட்பாளர்களும், ஜனாதிபதி பதவிக்கு 21 பேரும் போட்டியிடுகின்றனர்.
தென்கொரியாவை சேர்ந்த நிறுவனமொன்று தயாரித்த குறைந்தது 105,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இந்த தேர்தலுக்காக பயன்படுத்துவதற்கு அந்த நாட்டு தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருந்தது.
கொங்கோ தேர்தலில் பயன்படுத்துவதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை போன்றவையே, ஏற்கனவே பெல்ஜியம், பிரேசில், இந்தியா, நமீபியா, வெனிசுவேலா ஆகிய நாடுகளின் தேர்தல்களின் போதும் உபயோகிக்கப்பட்டுள்ளன.