நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா மனு தாக்கல் செய்துள்ளார். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் உள்ள தகவல்களை கண்காணிக்க, நுண்ணறிவு பிரிவு(ஐ. பி.), அமலாக்கத் துறை, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, ரா விசாரணை அமைப்பு, தில்லி காவல் துறை, ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு விசாரணை அமைப்பு ஆகிய 10 விசாரணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை இரவு அனுமதியளித்தது.
அந்த அனுமதியின்படி, நாட்டில் உள்ள அனைத்து கணினிகளிலும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் தகவல்களை கண்காணிப்பது, கணினிகள் மூலம் பரிமாறப்படும் தகவல்களைத் தெரிந்து கொள்வது, அனுப்பப்படும் தகவல்களை இடைமறிப்பது, தகவல்கள் அனுப்புவதை தடை செய்வது, அந்த தகவலின் உண்மைத் தன்மையை ஆராய்வது உள்ளிட்ட பணிகளை விசாரணை அமைப்புகள் மேற்கொள்ளலாம்.
இந்த விசாரணை அமைப்புகளுக்குத் தேவைப்படும் நேரத்தில், தகவல் தொடர்பு சேவையாளர், பயன்பாட்டாளர் மற்றும் கணினியின் உரிமையாளர் ஆகியோர் அனைத்துவித தொழில்நுட்ப வசதிகளையும் செய்து தந்து ஒத்துழைக்க வேண்டும்.
அவ்வாறு ஒத்துழைக்க மறுத்தால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இந்த உத்தரவு தனி நபர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது என மனுவில் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே எதிரக்கட்சிகள் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு ஏற்கப்பட்டால் நீதிமன்ற விடுமுறை காலம் முடிந்து வரும் ஜனவரி முதல்வாரத்தில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.