ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் 3 நிலைகளை கொண்ட ஒரு கனரக வகை ராக்கெட்டாகும். இதில் முதல் நிலைகளில் திட எரிபொருளும், 2-வது நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளன. 3-வது நிலையில் கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. 10 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வகையில் இந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், 4 டன் எடை கொண்ட செயற்கைகோளை சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தும் திறன் கொண்டது.
தற்போது 3 ஆயிரத்து 423 எடை கொண்ட ஜிசாட்-29 செயற்கைகோளை சுமந்து செல்கிறது. இதில் தகவல் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் அதிநவீன சக்தி கொண்ட ‘கா.கு.பாண்ட்’ டிரான்ஸ்பாண்டர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனை பூமியில் இருந்து 36 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதனுடைய ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.
தொலைத்தூரத்தில் உள்ள தகவல் தொடர்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கு க்யூ, வி என்ற நவீனதொழில்நுட்ப கேமரா மற்றும் கருவிகள், இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டு உள்ளது. நாளை (புதன்கிழமை) மாலை 5 மணிக்கு இதமான காலநிலை நிலவும் பட்சத்தில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3- டி2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்படும். இந்த செயற்கைகோள் மூலம் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பிராந்திய மாநிலங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் விரைவாக இணையதள சேவையை பயன்படுத்த உதவும்.
இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினார்கள்.